Monday, October 1, 2007

சிறுவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவோம்

ச.ஜெயப்பிரியா
கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

எமது நாட்டின் அரசியல் நிகழ்சித்திட்டங்களில் சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. பலதசாப்தங்களாக இலங்கையில் சுகாதாரம் மற்றும் கல்விச் செயற்பாடுகாள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குழந்தை மற்றும் தாய்சேய் இறப்பு வீதம் என்பன குறைவாக காணப்படுவதுடன், உயர்வான கல்வியறிவிற்கும் பாடைசாலைகளில் சிறுவர்களின் அதிகளவான பங்களிப்பிற்கும் இட்டுச் செல்கின்றது.

கல்விச் சேவைக்காக இலவச பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வசதிகள் என்பன காணபடுகின்றன. வறிய மானவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகாமல் இருப்பதற்காக இலவசப்பாடநூல்கள், புலமைப்பரிசில்கள் என்பன வழங்கப்படுகின்றன. இன்று எமது நாட்டில் 90 வீதத்துக்கு மேற்பட்ட கல்வியறிவு வீதம் ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படுகின்றது. இது எமது நாட்டில் பால் வேறுபாடின்றி அனைவரும் கல்விக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஒரு சான்றாகும். சிறுவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்காகவும் சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் 1977 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இது ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி, மாணவர் மையக்கற்பித்தல் முறை, விஞ்ஞானம் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் சவால்களுக்கு சிறப்பாக முகம் கொடுக்க கூடிய வகையில் சிறுவர்களை தயார்படுத்தல் போன்றவற்றினை உள்ளடக்கியுள்ளது.

கல்விச்சேவையைப்போலவே சமமான முன்னுரிமை சுகாதாரத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் போன்றோருக்கு முதன்மையான சுகாதாரப்பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. எனினும் இன்றுவரை போசாக்கு குறைபாடு HIV / AIDS போன்ற நோய்களின் தாக்கம் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை இந்நோய்கள் குறைவான பரம்பலைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இளைஞர்களிடையே இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய நோக்கில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்கள், பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படுகின்ற பாடசாலைகள், மற்றும் வயோதிபர்கள் போன்றோரால் இரகசியமான முறையில் தகாத நடவடிக்கைகளுக்கும் பலாத்தகாரத்திற்கும் உட்படுத்தபடுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிப்புச் செய்யும் முகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொழிற்பட்டுவருகின்றது. இச்சபை பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் கொடுமைகளைக் கட்டுப்படுத்தல் அவற்றிற்கு எதிராகப் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

இலங்கையில் சிறுவர்களை உள்நாட்டு முரண்பாடுகளில் இருந்து பாதுகாப்பது பாரிய சவால்களில் ஒன்றாக காணப்படுகின்றது. சிறுவர்கள் இராணுவப்படைகளில் சேர்த்துகொள்ளப்படுவது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் குறைந்த சம்பளங்களில் வேலைக்கமர்த்தப்படுவது ஒரு பாரிய பிரச்சனையாகும். சிறுவர் தொழிலாளர்கள் குறிப்பாக முறைசாரா துறைகளிலும் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் என்ற ரீதியிலும் காணப்படுகிறனர். இதனால் உள்நாட்டுச் சேவைகளில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெரும்பாலான சிறுவர்கள் மறைமுகமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களால் உபயோகிக்கப்படுகின்ற சிகரட், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றின் பாவனையை தடை செய்வதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இளைஞர்களிடையே பாவிக்கப்படுகின்ற இவ்வாறான தீங்குவிளைவிக்கும் பொருட்களின் பாவனையை தடை செய்து அவற்றில் இருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்திற்கான வாழ்க்கை முறையினை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் அதுவே இன்றைய சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு தூண்டுசக்தியாகும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சிறுவர் மீதான தாக்கத்தின் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நாடுகள் சிறுவர் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு தீவிரமாகச் செயற்படவேண்டும். அப்போது தான் சிறுவர்களின் உரிமைகளையும் அவர்களின் நன்னடத்தைகளையும் பாதுகாக்கமுடியும். சிறுவர் மீதான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது வறுமையே. வறுமைக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிகோலாக அமையும்.

சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுடன் சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள்,பங்களிப்புக்கள் என்பனவற்றில் அவர்களுக்குள்ள உரிமைகளில் விழிப்புணர்வை தூண்டுவதற்காக பாடசாலையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.அத்துடன் பாடசாலைகள்,வீடுகள் என்பவற்றில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற உடல்,உள ரீதியான கொடுமைகளுக்கு எதிராக பெற்றோர்களிடதிலும் விழிப்புணர்வை தூண்ட வேண்டும்.

எனவே, சிறுவர்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தகுந்த சூழலை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு வயோதிபர்களிடமே காணப்படுகின்றது. அத்துடன் சிறுவர்களின் எதிர்கால நலனில் கவனம் செலுத்த வேன்டிய பாரிய பொறுப்பு அரச தலைவர்கள், அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் என்பது எமது நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சிகரமான புதியதொரு உலகினை உருவாக்க முடியும். சிறுவர்கள்தான் நாட்டின் எதிர் காலம் எனவே ஒவ்வொருவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

நன்றி: வீரகேசரி
(sep 30- 2007)

0 உரையாடல்: